மாணவர்கள் மீதான தாக்குதலும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளும்





கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடாத்தினர். இந்தச் சம்பவமானது யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் மாத்திரமன்றி நாடளாவியரீதியில் இருக்கின்ற சகல பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இந்த விடயமானது தமிழ்மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த அராஜக  செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளதை காணககூடியதாக இருக்கிறது.

யாழ் கல்விச் சமூகத்தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய விடயம் அல்ல அவ்வப்போது பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்படுவதும் இடம்பெற்று வந்துள்ளன. அத்தோடு விசாரணைகளுக்காகவென பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படுவதும் வழமையான ஒரு விடயமாக ஏற்கெனவே காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்து மூன்றுவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறு மாணவர் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தையும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதே உண்மை.

நாட்டில் சிறுபான்மை என்ற எவரும் கிடையாது அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகளே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் வடக்கில் தொடர்ந்தும் அடக்குமுறைகளும் அட்டகாசங்களும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி தமிழர்களை குடைந்தெடுக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த 27 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் நான்கு மாணவர்களையும் குற்றப்புலனாய்வினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

வருடம்தோறும் கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் தமிழர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி உணர்வலைகளோடு யுத்தத்தால் மரணித்த தமது உடன்பிறப்புகளுக்காக வழிபடுவது வழமை. அத்தோடு இந்தியா உட்பட பல மேற்குலக நாடுகளிலும் இந்த கார்த்திகை மாத நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவது யாவரும் அறிந்த விடயமே. யுத்த காலத்தின்போது இந்த மாதத்தில் அரசாங்கம் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதும் நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழமையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சூழல் தோன்றியிருப்பதாக அரசாங்கமே கூறுகின்றது. இந்த நிலையில் வடக்கில் மாத்திரம் ஏன் இப்படி அராஜகம் இடம்பெறுகிறது?

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவது என்பது ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் கட்டாய நிகழ்வாகும். இலங்கையிலும் யுத்தத்தில் இறந்த படைவீரர்களை நினைவுகூருகிறNhம். அந்தவகையில் தமிழர்கள் தமக்காய் இறந்தவர்களை கார்த்திகை 27 ஆம் நாளில் நினைவுகூருகின்றார்கள்.

இவ்வாறான ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் படையினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் தீபம் ஏற்றி கார்த்திகை வீரர்களை நினைவு கூருவார்கள். அவ்வாறே கடந்த 27 ஆம் திகதி மாணவர்கள் கார்த்திகை வீரர்களை நினைவு கூருவதற்கு தயராகிக் கொண்டிருக்கையில், பல்கலைக்கழக விடுதிகளுக்குள் அத்துமீறி புகுந்த ஆயுதக்குழு தமது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. மாணவர்கள் மாணவிகள் என்று பேதம் பார்க்காமல் அவர்களின் அறைகளுக்குள் நுழைந்து ஏற்றிவைக்கப்பட்ட கார்த்திகை தீபங்களை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள் அறைகளை அடித்து நொருக்கினர். சற்றும் ஏதிர்பார்க்காத மாணவிகள் பலர் ஆயுதக் கும்பலைப் பார்த்து பயத்தில் மயக்கமுற்று வீழ்ந்தனர்.

ஆயுக்குழுவின் இந்த அட்டூழியத்தைச் சகிக்கமுடியாத மாணவர்கள் பலர் எதிர்ப்பை வெளியிட்டனர். இது கைகலப்பாக மாறியது. அத்துடன் மாணவர்கள் கற்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவ்வாறு அன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் நடந்த சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதக்குழு அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியதைக் கண்டித்து சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் 28 ஆம் திகதி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அவர்கள் பேரணியாக விஞ்ஞான பீடத்துக்குச் செல்ல முயன்றனர். 27 ஆம் திகதி முதலே பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் குவிக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்களின் பேரணியை இடை மறித்தனர். அப்போது மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

'ஆரம்பத்தில் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் தடிகளாலும் பொல்லுகளாலும் எங்களைத் தாக்கத் தொடங்கினர் நாங்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்த போது அவர்கள் எம்மைத் துரத்தித் துரத்தி தாக்கினார்கள் மாணவர்கள் சிலர் கீழே விழுந்தார்கள் அவர்களைப் பொலிஸார் தமது சப்பாத்துக் கால்களால் மிதித்துக் காயப்படுத்தினார்கள். இவர்களது தாக்குதல்களுக்கு மாணவிகள் மட்டும் விதிவிலக்கல்ல மாணவிகள் என்றுகூடப் பார்க்காமல் அவர்கள்மீதும் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் பதினைந்து மாணவர்கள் வரை காயமடைந்தார்கள் மாணவிகள் உட்பட எட்டுப்பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நான்கு மாணவர்களை பொலிஸார் அவ்விடத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் பேராசிரியர்களும் துணைவேந்தரும் பொலிஸாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்கள் இராணுவத்தினர் மீதும் பொலிஸார்மீதும் கற்களையும், போத்தல்களையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதை அடக்குவதற்காகவே இந்ந தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 30ஆம் திகதி யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ப. தர்ஷானந் (வயது 24), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க. ஜெனமேனன் உட்பட நான்கு மாணவர்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருநெல்வேலி சிறி ரெலோ கட்சி அலுவலகத்தின்மீது பெற்றNhல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் மாவீரர்தின போஸ்டர்கள் ஒட்டியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல எதிர்ப்பலைகள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எழும்ப ஆரம்பித்துள்ளன.  இத்தாக்குதல் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டது. சபையில் சுமந்திரன் எம்.பி. நாட்டில் சட்டம் ஒரு பாரதூரமான நிலைமையை முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித்துறையின் சுயாதீனத் தன்மை பாதாளத்தை நோக்கிச் செல்கிறது. இப்போது யாழ். பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து பெண்கள் விடுதிக் கதவுகளை உடைத்து கட்டில்களை நொருக்கியுள்ளனர் இவ்வாறான மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

'தமிழர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன இதன் ஒரு அங்கமே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல். பல்கலைக்கழக மாணவர்களை அடக்கியாள நினைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை அவிழ்த்துவிட்டு பழிதீர்க்கிறது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவும் தன் பங்கிற்கு கவலை வெளியிட்டுள்ளது. அமைதியாக மேற்கொள்ளப்படும் பேரணிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இலங்கை அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தூதரகம் ஆழ்ந்த கவலை அடைகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்துகின்றNhம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்தும் மாணவர்களுக்கு ஆதரவாய் பல குரல்கள் எழுந்துள்ளன. நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் ' மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையானது காட்டுமிராண்டித்தனமானது. புனிதமான கார்த்திகை நாளை நினைவுகூருவது தமிழர்களின் கடமையாகும் இதை திட்டமிட்டு தடுக்கும் செயலே மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்" என தெரிவித்துள்ளார். இதேவேளை தி.மு.க. தலைர் கருணாநிதி ' யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கார்த்திகை தீபத்தையொட்டி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் வீடுகளில் ஏற்றிவைத்த தீபத்தைக்கூட அடித்து நொருக்கி ஈழத்தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளமையை கண்டிக்கிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சஞ்சீவ பண்டார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்' யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பை வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த திங்கட்கிழமை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். கிழக்குப்பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக முன்றலில் இடம்பெற்ற எதிர்ப்பார்ப்பாட்டத்தில். 'பல்கலைக்கழகம் என்பது போர்க்களமா?", ' இலங்கை அரசே பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்", 'இராணுவமே மாணவர் சக்தியை முடக்க முயற்சிக்காதே" எனப் பல சுலோகங்களை மாணவர்கள் எழுப்பினர். பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்கு திரும்புவது என்றால் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் உட்பட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரியும் யாழ்.நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று யாழில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் நவசமசமாஜக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிஸ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு இராணுவம், பொலிஸாரினது அடக்குமுறைகளை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தினர். தமிழ்ப்பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி சகல தமிழ்க் கட்சிகளும் ஒப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றையும் அனுப்புவதற்காக இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'சர்வதேசமே சுய நிர்ணய உரிமையுடன் தமிழ் தேசத்தை அங்கீகாரம் செய்", 'யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கின்றNhம்",'விடுதலை செய் விடுதலை செய் மாணவர்களை விடுதலை செய்", 'தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்காதே", 'தமிழ் மாணவர்களை சுதந்திரமாகக் கல்வி கற்க விடு",  போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைககளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சமூகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அவர்களை நம்பிக்கை அடைய வைத்துள்ளன. கடந்த காலங்களிலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. அப்போதெல்லாம் இந்த அளவிற்கு அவர்களுக்கு ஆதரவுக்குரல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது எழுந்துள்ள எதிர்ப்பலைகள் தமிழ் மக்கள் இதயங்களில் பாலை வார்த்துள்ளன.

எஸ்.ரகுதீஸ்


தொண்டு நிறுவனம் வழங்குகின்ற நிதியுதவி வீடுகள் அமைக்கப்போதுமானதாக இல்லை



வடமராட்சி கிழக்கு மக்கள் ஆதங்கம்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகை குறித்த வீடுகளை அமைக்கப் போதுமானதாக இல்லையெனவும் தமக்குத் தரப்படுகின்ற பணத்தைக் கொண்டு வீடமைப்பதற்குரிய பொருட்களைக் கூடக் கொள்ளவனவு செய்யமுடியவில்லை எனவும் அப்பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்கமைய ஒவ்வொரு வீடுகளுக்கும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இப்பணத்தினைக் கொண்டு பகுதியளவு வீட் டைக் கூட அமைக்கமுடியாத நிலையில் அப்பிரதேச மக்கள் அல்லலுறுகின்றனர்.
இப்பிரதேசத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் 500 வீடுகளும் சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் 500 வீடுகளும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 90 வீடுகளும் தற்பொழுது அமைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் பணத்தொகை வீடமைப்புக்கு போதுமானதாக இல்லை என்பதால் வீடுகளை அமைப்பதில் பயனாளிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். சில வீடுகளுக்கான அத்திபாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவ் வீடுகளை அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என அம் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் வீடு கட்டுவதற்குரிய கல், மண், சீமெந்து போன்ற பொருட்களை உரிய இடங்களிற்குக் கொண்டு செல்வதற்கு வீதிகளின்மையால் போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் வீடுகளை அமைக்க முன்னராக போரால் பாதிப்படைந்துள்ள அப்பிரதேச வீதிகள் புனரமைக்கப்படவில்லை. இதனால் வீட்டுத்திட்டப் பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களை  எதிர்கொள்கின்றனர்.
எனவே இதற்கு மேலதிகமான கொடுப்பனவு வழங்கி உதவுமாறு சம்பந்தப்பட்ட அரச, அரசசார்பற்ற அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போர் அனர்த்தம், ஆழிப்பேரலை என்பவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்கள் வீடுகளை அமைப்பதற்கு உரிய பணக் கொடுப்பனவை வழங்கவேண்டுமென பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கூடங்குளம் அணு உலை ஆபத்துக்கும் எமக்கும் வெகுதூரமில்லை


 கூடங்குளம் போரட்டம் என்பது இப்போது இந்திய ஊடகங்களில் அதிகம் அடிபடும் பெயராக உள்ளது. அது மெல்ல மெல்ல பரவி இப்போது இலங்கை உள்ளிட்ட சர்வதேசங்களிலும் பேசப்படும் விடயமாக மாறிவிட்டது. இலங்கையை பொறுத்தவரை மக்கள் அனைவரும் இதை ஒரு இந்திய விவகாரமாகவே கருதி வந்தனர். ஆனால் அது இலங்கையையும் பாதிக்கும் மிகப்பெரிய விடயம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாட்டின் மீன்வளம் மிக்க கரையோர மாவட்டமான திருநல்வேலி மாவட்டத்தின் கூடங்குளம் என்னும் ஊரில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்யாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்துக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டில் அப்போது பிரதமராயிருந்த ராஜீவ் காந்தியாலும் ரஷ்ய பிரதமராயிருந்த மிக்கையில் கொர்பச்சோவினாலும் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்ட பிளவுகளாலும், அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததாலும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கூடங்குளம் அணுமின் திட்டம் 2001 ஆம் ஆண்டில் மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. இதன் மதிப்பு இலங்கை பணத்தில் 34,0375 கோடியாகும்.

ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து கடல் வழியாகக் கொண்டுவரப்படும் அணுமின் நிலையத்துக்கான பாகங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தரை மார்க்கமாக கூடங்குளத்துக்கு கொண்டுவருவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் கூடங்குளத்தில் சிறிய அளவிலான துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டது. இந்தியாவின் அதி சக்தித் திறன் வாய்ந்த அணுமின் நிலையமாக கூடங்குளம் திகழும் என்பது இந்திய அரசின் கனவாக இருக்கிறது.

இவ் அணுமின் நிலையத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் எதிர்ப்பலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் யப்பான் புகுஷிமா, டச்சி போன்ற நகரங்களில் அணுமின் நிலயங்களின் களிவு மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட அணுஉலைக் கசிவு மற்றும் இதன் விளைவால் யப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் தமது அணுமின் உலைகளை மூடியமை போன்ற சம்பவங்கள் இத் திட்டத்துக்கு இருந்த எதிர்ப்பலைகளை சுனாமிப் பேரலையாய் மாற்றியது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற கரையோரப் பிரதேச மக்கள் பெரும் எதிர்ப்புப் போரட்டங்களை ஆரம்பித்தனர். உடனடியாக இவ் அணுமின் நிலையத்திட்டத்தை கைவிடும்படி மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் அறைகூவல் விடுத்தனர். இவர்களுக்கு சில அரசியல்வாதிகளும் ஆதரவுக் குரல் எழுப்பினர். இப் போராட்டங்களுக்கு உதயகுமார் என்பவர் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கடலில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டப் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்தினார்கள். மணப்பாட்டில் நடந்த போராட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கெண்டனர். இதனால் பலர் காயமடைந்தனர். அந்தோனியான் என்பவர் பொலிஸாரின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியாகி உயிரிழந்தார்.

ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இப்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதிலும் அங்குள்ள முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்பிக்கொள்ள அணுசக்தி ஒழுக்காற்று ஆணையம் அனுமதி கொடுத்த பிறகு, அங்குள்ள மக்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இறுதி யுத்தம் என்கிற பெயரில் மக்கள், போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் திணறுகின்றன.

நடப்பவை எல்லாம் எல்லை மீறிச் செல்வதை உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீனவர்களை சமாதானப்படுத்த கச்சதீவு விவகாரத்தைக் கையிலெடுத்தார். மீனவர்களைக் காப்பாற்ற ஒரே வழி கச்சதீவை மீட்பதுதான் எனத் தீர்மானித்தார். எனவே 2008 ஆம் ஆண்டில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி இன்னொரு மனுவைத் தாக்கல் செயப் போவதா அறிக்கை வெளியிட்டு, மீனவ மக்களை தன்பால் வசப்படுத்த எத்தணித்தார்.

ஒரு வருடமாக இந்த விடயத்தில் மௌனமாகவிருந்த கலைஞர் கருணாநிதி கடந்த மாதம் 13 ஆம் திகதி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அணுமின் நிலையப் போராட்டம் தற்போது போராட்டக்காரர்கள் கையை விட்டு பொதுமக்களின் கைகளுக்குப் போவிட்டது. நடந்ததை விட்டு விட்டு நடப்பது நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேச வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நினைக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை இலங்கையிலும் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள ஆகக்குறைந்த தூரம் 74 கிலோமீற்றர் மாத்திரமே. அதுவும் வடக்கின் மன்னார் பிரதேசம் இந்தியாவிலிருந்து ஆகக் குறைந்த தொலைவில் உள்ளது. இதனால் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் இவ் அணுஉலை தொடர்பில் பெரும் அச்சம் நிலவ ஆரம்பித்துள்ளது.

இந்த அணு உலையில் கசிவோ அல்லது வெடிப்போ ஏற்பட்டால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு இலங்கையைத் தாக்கக்கூடிய சந்தர்பப்ம் அதிகமுண்டு. அதுவும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். கதிர்வீச்சின் தாக்கம் பல சந்ததிகளுக்கு நீண்டு செல்லும். இவ்வாறான சம்பவங்கள் பல வெளிநாடுகளில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மன்னார் ஆயர் ராயப்பு யோசப்பின் பிரதிநிதி வண. ஜெயபாலன் குரூஸ், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஐக்கிய சமவுடமைக் கட்சி பொதுச்செயலர் சிறிதுங்க ஜெயசூரிய உள்ளிட்ட குழுவினர் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவைச் சந்தித்து இவ் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினர்.

இச் சந்திப்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், அணுமின் நிலயத்திலிருந்து கழிவுகள் அகற்றப்படுவது தொடர்பிலும் எழுந்துள்ள கேள்விகள் இந்தியத் தூதுவரிடம் எழுப்பப்பட்டது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பாக மன்னார் மக்கள் கொண்டுள்ள அச்சம் தொடர்பிலும் இந்தியத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் எழுத்துமூல ஆவணம் ஒன்றும் குறித்த குழுவினரால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தமிழக முதல்வருக்கும் இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது.

கூடங்குளம் அணுமின் உலையின் ஆபத்து தொடர்பில் உணர்ந்த தென்னிந்திய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து எமக்கு வெகு தூரமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்க்காமல் அதனால் எமக்கும் உள்ள பாதிப்பை உணரவேண்டும். தமிழக மக்களின் போராட்டத்துக்கு நாமும் தோள்கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நிகழவுள்ள ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

எஸ். ரகுதீஸ்
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger