பொதுமக்களால் அமைக்கப்பட்டுவரும்
வடமராட்சிக் கிழக்கு
கொடுக்குளாய் - இயக்கச்சி இணைப்பு வீதி



மாறிமாறி வரும் அரசாங்கங்கள் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பதாக கூறிவருகின்றன. ஆனால், கிராமப்புறங்கள் இன்றும் கவனிக்கப்படாமலேயே காணப்படுகின்றன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்கிலுள்ள கொடுக்குளாய் கிராமமும் ஒன்று.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகக் காணப்படும் இந்தக் கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. மணற்பரப்பைக் கொண்ட அழகிய கடற்கரை சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் விதமாகக் காணப்படுகின்றது.

மீன் பிடியை பிரதானமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் தமது கிராம அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றனர். கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திகளை தாமாகவே மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு அரசியல் வாதிகளையும் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. யுத்தம், சுனாமி என மாறி மாறி பாதிப்புக்களுக்குள்ளாகியுள்ளனர். ஆனால், மீண்டும் தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு தற்பொழுது தலைநிமிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்தான், இவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, இந்தக் கிராம மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி உள்ளிட்ட 9 வீதியிலுள்ள பிரதேசங்களுக்கு செல்வதாயின் பல கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. அதாவது, 25 கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. இந்த கொடுக்குளாய் - இயக்கச்சி இணைப்பு வீதி திறக்கப்பட்டால் 10 கீலோமீற்றர் தூரம் மாத்திரமே செல்லவேண்டியுள்ளது.

இந்த வீதி அமைப்பதற்கான முயற்சிகள் 1974 ஆம் ஆண்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அரசியல் வாதிகளும், சம்ந்தப்பட்ட உத்தியோகத்தர்களும் இந்த விடயத்தில் பாராமகமாகவே இருந்த வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்த மக்கள் தற்போது தாமாகவே இந்த வீதி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்தப் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்கள் இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இவர்களின் உதவியுடன் பிரதேச மக்களும் தம்மாலியன்ற நிதியுதவியை வழங்கியதுடன், வீதி அமைக்கம் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 20 உளவு இயந்திரங்களும், இரண்டு பெக்கோ இயந்திரங்களும் வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.


ரசாங்கத்தையோ, அரசியல் வாதிகளையோ நம்பாமல் கொடுக்குளாய் பிரதேச மக்கள் தமது சொந்தப் பணத்தாலும் சுய முயற்சியாலும் இந்த வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த பணியை துரிதப்படுத்த வேண்டுமாயின், மேலும் உதவிகள் தமக்குத் தேவைப்படுவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான உதவிகளை வழங்க சமூக ஆர்வலர்களும், மக்கள் நலன்விரும்பிகளும் முன்வருவார்களேயானால், இந்தப் பிரதேசம் அபிவிருத்தியில் உச்ச நிலையை அடையும் என்பதில் ஐயம் இல்லை.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை குறிவைக்கும் இந்திய மீனவர்கள்


அண்மைக்காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ள இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றது. இந்தப் பிரச்சினை குறித்து தமிழ் நாட்டிலும் தென்னிலங்கையிலும் பல்வேறு போராட்டங்களும் கருத்துப் பரிமாற்றங்களும், கலந்துரையாடல்களும் பல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தச் சம்பவங்களுடனும் பாதிப்புக்களுடனும் அதிகமாகத் தொடர்புபட்ட வடபகுதி மக்கள் குறித்து எவரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் உச்சக்கட்டத்தை வடபகுதி மீனவர்களே சந்தித்து வருகின்றனர். இந்த மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொறிமுறைகளில் முக்கிய தரப்பான வடபகுதி மக்கள் உள்ளடக்கப்படவில்லை. அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ சங்கங்களிடம் இதுதொடர்பில் அறிவித்தலோ ஆலோசனையோ நடத்தப் படவில்லை என்று வட பகுதி கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடல்வளம் மிகுந்த வடபகுதியில் இந்திய மீனவர்களினதும், தென்னிலங்கை மீனவர்களினதும் அத்துமீறல் காரணமாக மீனவர்கள் தொழில் ரீதியில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். ஆரம்ப காலங்களில் அளவாக மீனைப்பிடித்து வளமாக வாழ்ந்துவந்த வடபகுதி மீனவர்கள், இன்று மீன்பிடிக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமது கடற்றொழில் உபகரணங்களையும் இழந்து வேதனையுடன் திரும்புகின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் மீளக் குடியேறியுள்ளனர். தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காக வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடியில் சுதந்திரமாக ஈடுபடமுடியாத நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

வடபகுதியைப் பொறுத்தவரை அங்கு கடலடித் தளமேடை அல்லது கண்ட மேடை எனப்படும் ஆழம் குறைந்த கடற்பகுதி அதிகமாக உள்ளது. இது வடக்குக் கடற்பரப்புக்கான சிறப்பம்சமாகும். இந்த கடலடித் தளமேடை இலங்கையின் ஏனைய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை. இந்த கடலடித் தளமேடையில் 'பிளாந்தன்' எனப்படம் பாசிவகைக் கடற்தாவரம் அதிகமாக வளரும். இந்த 'பிளாந்தன்' தாவரங்களை மீன்கள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன. இதனால் இந்தப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக மீன்கள் வருகின்றன. குறிப்பாக இறால், கணவாய், நண்டு போன்றவை இங்கு அதிகமாகக் காணப்படும். இதனாலேயே வட பகுதிக் கடல் மிகவும் வளம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. அத்துடன் வடபகுதியில் காணப்படும் பவளப் பாறை எனப்படும் முருகக் கற்பாறைகளும் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியான இடமாகக் காணப்படுகின்றன. அதனால் இந்தப் பகுதிகளில் மீன்களும் மீன் குஞ்சுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. வடக்கு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்த மீன் வளத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதாவது அளவான முறையில் மீன்களைப் பிடித்து வளமாக வாழ்ந்தனர். சிறிய அளவிலான படகுகளையும் வலைகளையும் பயன்படுத்தி மீன்கள் அழிந்து போகாத வகையில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். சில வரையறைகளை தாமாகவே ஏற்படுத்தி முறையான விதத்தில் மீன்பிடியில் ஈடுபட்டனர். உதாரணமாக மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலப்பகுதியில் இந்த மக்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை. இதனால் கடலடிச் சமனிலை சீராகப் பேணப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது

வடபகுதிக் கடலில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரினங்களும் நிறைந்துள்ளமையால் இங்கு தமிழக மீனவர்களும், தென்பகுதி மீனவர்களும் படையெடுக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருந்த காலத்தில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற இந்தக் காலகட்டத்தில் இவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இவர்கள் எந்த விதத்திலும் சூழல் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாமல் தமது வருமான நோக்கத்தை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படுகிறார்கள் என வடபகுதி மீனவர்கள் விசனமடைந்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் அமைப்பிற்கமைய சில மீன்பிடி முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த தடைசெய்யப்பட்ட முறைகள் அனைத்தும் இப்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. தங்கூசி வலை, இழுவை மடி வலை, மடி வலை, போன்றவற்றைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடைசெய்யப் பட்ட முறைகளாகும். இவ்வாறான முறைகளை பயன்படுத்துவதை வடக்கு மக்கள் தவிர்த்து வந்தனர். ஆனால் இந்த முறைகள் அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி மீனவர்களும், தமிழக மீனவர்களும் வட பகுதி கடல்களில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடபகுதி கடலடிச் சமநிலை பாதிக்கப்படுவதுடன், கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மீன்குஞ்சுகள் அள்ளப்பட்டு செல்கின்றது. இதனால் எதிர்கால மீன் வளம் கேள்விக்குறியாகும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை அங்கு மீன்வளம் குறைந்துகொண்டே செல்கின்றது. ஆரம்ப காலங்களில் தமிழ்நாட்டிலும் கடலடித் தள மேடைகள் அதிகமாகக் காணப்பட்டன, ஆனால், ரோலர் போன்ற பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் இந்த வளங்கள் அழிந்துகொண்டே செல்கின்றன. குறிப்பாக இழுவை மடி வலை என்ற வலையைப் பயன்படுத்துவதால், இந்த வளங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கடலடித் தள மேடையில் இந்த வலையைப் பயன்படுத்தும்போது, கடலிலுள்ள மணல் மட்டுமன்றி அதிலுள்ள 'பிளாந்தன்' போன்ற கடல் தாவரங்களுடன் மீன் குஞ்சுகளும் வாரி எடுக்கப்படுகின்றன. இதனால் கடலடித்தள மேடைகள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இழுவை மடி வலையைப் பயன்படுத்தும்போது கடல் மண்ணுடன் வாரி எடுக்கப்படும் பிளாந்தன் தாவரங்களை மீண்டும் கடலுக்குள் வீசுகின்றனர். ஆனால், இந்தத் தாவரங்களைப் பொறுத்தவரை கடல் நீரிலிருந்து வெளியில் எடுத்த சில கணங்களிலேயே அவை இறந்து விடுகின்றன. இதனாலேயே தமிழகக் கடற்பகுதிகளில் மீன் வளங்கள் அற்றுப் போயுள்ளன. இதனால்தான் தமிழக மீனவர்கள் மீன்வளம் மிகுந்த வடக்கை நோக்கி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தமிழகத்தில் பயன்படுத்திய அதே முறையைத்தான் இங்கும் பயன்படுத்த முனைகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது வடபகுதி மீனவர்கள்தான்.

வடக்கின் மன்னார் முதல் சுண்டிக்குளம் வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் 24 மணித்தியாலயங்களும் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மீனவர்கள் எப்பொழுதுமே பகல் வேளைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் மீன்கள் பகல் வேளையிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு அவர்கள் பகலில் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் 24 மணித்தியாலயங்களும் இலங்கைத் தமிழர் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் வடபகுதியில் தமிழகத்தைப் போன்று மீன்வளம் குறையும் நிலை ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி பாரிய ரோலர் படகுகளில் மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்கள் வடபகுதி மீனவர்கள் பயன்படுத்தும் சிறிய அளவிலான வலைகளையும், ஏனைய மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்துகிறார்கள். வலைகளை வெட்டிச் செல்வது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.

யுத்தத்தால் பல்வேறு இழப்புக்களையும் இன்னல்களையும் சந்தித்து மீண்டுள்ள வடபகுதி தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது, அதற்குத் தடையாக தமிழக மீனவர்கள் செயற்படுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவரும் அதே தமிழக மக்கள்தான் அன்றாட உணவுக்காய் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத் தொழிலை சீர்குலைக்கின்றனர். இது ஏன் தமிழக அரசியல் வாதிகளின் பார்வையில் படவில்லை என்ற கேள்வியை வடக்கு மக்கள் எழுப்புகின்றார்கள்.

2004 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடல் வலயத் தடைச்சட்டம் முதல் வடபகுதி மீனவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ச்சியான இடப்பெயர்வுகளாலும், சுனாமியினாலும் இழப்பின் உச்சக்கட்டத்தை எட்டிநிற்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ளாத தமிழக மக்களும் தமிழக அரசும், தமிழக அரசியல்வாதிகளும் மீனவர்களை விடுவிப்பதில் பேரம்பேசி வருகின்றனர். இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களையும், தமிழகச் சிறையிலுள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிப்பது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகச் சிறைகளில் எந்தவொரு வடபகுதி மீனவர்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மையை இந்த இரண்டு தரப்பும் உணரவேண்டும். ஏனெனில் வடபகுதி மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்தல், கடல் வளத்தை அழிக்கும் வகையில் மீன்பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த இரண்டு தரப்பினராலும் அதிகம் பாதிக்கப்படுவது வடபகுதி மீனவர்கள்தான். தமிழக மீனவர்களினதும், தென்பகுதி மீனவர்களினதும் அத்துமீறல்களுக்கு ஆளாகி தமது தொழிலுபகரணங்களை இழந்து நிற்கின்றார்கள். ஆனால் இது தொடர்பில் யாரும் பேசுவதற்கு முன்வருவதில்லை.


எதிர்வரும் 27 ஆம் திகதி இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்றவுள்ள பேச்சுவார்த்தையின் போது வடபகுதி மீனவ பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கங்களின் சமாஜம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் மீனவ அமைப்பு போன்றவை ஓரங்கட்டப்பட்டுள்ளன. அந்த அமைப்புகளிடம் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையோ அல்லது ஆலோசனையோ நடத்தப்படவில்லை. இந்த மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த கரையோர மீனவர் அமைப்பு என்ற அமைப்பு மாத்திரம் பங்குபற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக தெரிய வருகிறது. இந்த அமைப்பு சுதந்திரக் கட்சியினால் தமது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இதனாலேயே இந்தப் பேச்சு வார்த்தையில் இந்த அமைப்பை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஈடுபடுத்தியிருந்தார். இந்த பேச்சு வார்த்தையின் மூலம் இந்தியச் சிறைகளிலுள்ள 247 தென்பகுதி மீனவர்களை மீட்பதன் மூலம் கரையோர மக்களின் வாக்குகளைப் பெறுவதே அரசின் திட்டமாக இருந்தது. ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத தமிழக மீனவ அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற வடமாகாண மக்கள் தொடர்பில் சிந்திக்காது தொடர்ந்தும் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபடுகின்றன.

அதேநேரம், தமிழ்நாட்டில் சரிந்துபோயுள்ள தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இலங்கை அரசுடன் இணைந்து இவ்வாறானதொரு பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்துகின்றதா என்ற எண்ணமும் தமிழ் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் என்று கோஷமிடும் தமிழக அரசியல்வாதிகள் சிலருக்கு இந்த விடயம் புரியாதிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. இப்பிரச்சினை தற்பொழுது முற்றியுள்ள நிலையில் இதனை தென்னிலங்கை ஆட்சியாளர்களும் இந்திய அரசியல்வாதிகளும் அரசியலாக்கியுள்ளதால் வடபுல மீனவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஒருநாட்டின் வளங்கள் அனைத்தும் அந்த நாட்டுமக்களுக்குச் சொந்தமானவையாகவும் சர்வதேச சட்டங்களால் நாடுகளின் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டும் காணப்படுகின்ற பொழுதிலும், வடக்கில் அத்துமீறி இந்தியர்கள் மீன் பிடிப்பதற்கு இலங்கை .அரசு மறைமுகமாக அனுமதி வழங்கியுள்ளதா என்ற சந்தேகம் வடபகுதி மக்களிடையே காணப்படுகின்றது.
இதேபோல் தற்பொழுது வடகடலில் அரசின் அனுமதியுடன் சீனர்களும் மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

எனவே வடபுல மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மீனவர்களும் தமது கடலில் மீன்பிடித்து வாழக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும்


எஸ்.ரகுதீஸ்

துரத்திய தோல்விகள்; முடிந்தது வாழ்வு! - இளம் நடிகர் உதய் கிரணின் தவறான முடிவு

தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உதய் கிரண் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரில் மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடிய உதய் கிரண், ஹைதராபாத் திரும்பிய பிறகு, தன்னுடைய மனைவி விஷிதாவிடம் பலமுறை தற்கொலை முடிவைப் பற்றி கூறியதாகவும், அதனால்தான் அவர் எங்கு போனாலும் விஷிதாவும் கூடவே சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி விஷதா, சொந்தக்காரர்களுடைய வீட்டில் நடந்த ஒரு பிறந்த நாள் விழாவுக்கு சென்றபோது, உதய்கிரண் தற்கொலை செய்துகொண்டார்.
வி.வி.கே.மூர்த்தி, நிர்மலா தம்பதி யருக்கு 1980 ஜூன் 20-ம் தேதி மகனாகப் பிறந்த உதய் கிரண் செகந்தராபாத் வெஸ்லி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த உதய்கிரண், படிக்கும் காலத்தில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆர்வத்தின் விளைவாக 'மிஸ்டீரியஸ் கேர்ள்' என்னும் ஆங்கில குறும்படத்தில் நடித்தார், அதற்கு அப்புறம் பல விளம்பர படங்களில் நடித்த அவர், 2000-ம் ஆண்டில் தேஜா இயக்கத்தில் 'உஷோதயா' நிறுவனம் தயாரித்த 'சித்திரம்' படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை 19 திரைப்படங்களில் நடித்துள்ள உதய் கிரண், முதல் மூன்று படங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்று ‘ஹாட்ரிக்' கதாநாயகன் என்று புகழ் பெற்றார். 2006-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்' படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமான உதய் கிரண், 'வம்புச்சண்டை', 'பெண் சிங்கம்' படங்களிலும் நடித்தார். விரைவில் ஓர் தமிழ்ப் படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.

சாகும்வரை வெற்றிக்காக ஏங்கினார்
வெற்றி மேல் வெற்றியை தன்னுடைய முகவரி ஆக்கிக் கொண்ட உதய் கிரணுக்கு 2003-ல் தெலுங்கு பட உலகின் “மெகா ஸ்டார்” சிரஞ்சீவி மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. சிரஞ்சீவி அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார்.
அதன் பின் உதய் கிரணை தொடர் தோல்விகள் துரத்திக்கொண்டே இருந்தன. ஒரு வெற்றிப் படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற அவருடைய ஆசை நிறைவு பெறவே இல்லை. ஆகையால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகினாரென்றும், அவரை அதிலிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்த பெற்றோர், அவருடைய பால்ய சிநேகிதியான விஷிதாவுடன் 2012 அக்டோபர் 24-ம் தேதி திருமணம் நடத்தி வைத்ததாகவும் 'டாலிவுட்' வட்டாரத்தில் 'கிசு கிசு'க்கள் பேசிக்கொண்டது உண்டு.
இதைப்பற்றி அவருடடைய தந்தை மூர்த்தியிடம் கேட்டபோது, ''அவன் என் பையன். அவன் கோழை இல்லை. சிறு வயதிலேயே எத்தனையோ இக்கட்டான பிரச்சினைகளைச் சந்தித்தவன். ஹைதராபாதில் கோடிக்கணக்கில் சொத்துகளை வைத்திருக்கிறான். திடீரென்று அவன் சாக வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

தன்னுடைய மகன் தற்கொலையில் ஏதோ மர்மம் இருப்பதாக அவர் சந்தேகப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி சத்திய நாராயணா கூறியபோது, உதய் கிரணின் மனைவி புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.
உதய் கிரணின் கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை போலீஸார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி சடங்கு நடக்கப் போவதாக சொன்னார்கள் . அவர் கடைசியாக தன்னுடைய கைப் பேசியின் மூலமாக சென்னையிலுள்ள பூபால் என்னும் நபருடன் பேசியதாகவும், தன்னுடைய மனைவி விஷிதாவிற்கு 'I love you' என்ற குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

வெற்றியின் சின்னம் தற்கொலை அல்ல
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு துடிப்பு மிக்கப் பையன், தன்னுடைய வாழ் நாள் கனவான நடிகனாக மாறியதே மாபெரும் வெற்றி. அதற்கு அப்புறம் தொடர் தோல்விகளின் அணைப்பில் சிக்கிக்கொண்டாலும், அவைகளை 'உயிருடன்' எதிர்கொண்டு தோற்கடிப்பதுதானே வாழ்க்கை! வெற்றி யின் சின்னம் தற்கொலை இல்லையே! இதை எதிர்காலத்தின் ''உதய்கிரண்கள்'' உணர்வார்களா?

ஆடுகளம் புகழ் ஜெயபாலன் இலங்கையில் கைது!

தனுஷின் ஆடுகளம் படத்தில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் ... ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு வணக்கம் செலுத்த சென்றிருந்தவேளையில் அவர் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த அவர்  விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பாம்பு

நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள்ளிருந்து பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்கவின் அறையிலுள்ள பூச்சாடியொன்றின் கீழிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது விரியன் பாம்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அறையிலுள்ள தொலைபேசியை இன்று நண்பகல் 12 மணியளவில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியரே இந்த பாம்பைக் கண்டதாகவும் அது பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போனோர் ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாது சென்ற நவீபிள்ளை!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்  இந்த சந்திப்பு இன்றுக்காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையிலும் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில்,  காணாமல் போனோரின் சங்கத்தினர் தங்களுடைய உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு வாசிகசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த காணாமல் போனோர் சங்கத்தினரும் பங்கேற்றனர். இதில் தமிழ்,சிங்கள் மற்றும் முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், தமிழ்த்தேசிய முன்னணியின் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
பொது நூலகத்தில்   இடம்பெற்ற சந்திப்பிற்காக முன்வழியாக வருகைதந்த ஆணையாளர் நவனீதம்பிள்ளை சந்திப்புகளை முடித்துக்கொண்டு பொது நூலகத்தின் பின்வழியாக சென்றுவிட்டார் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அஜித்தின் படத்தை வைத்திருந்த தங்கையை கண்டித்த அண்ணன்!:ஆத்திரத்தில் தீக்குளித்து யுவதி தற்கொலை !

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் தென்னிந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருந்த யுவதி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு சென்றிருந்த அண்ணன், யுவதியின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் படங்களை கண்டு, யுவதியை கண்டித்துள்ளார்.

இதனால் யுவதி தனக்கு தானே தீயிட்டு கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடலில் தீ பரவியதன் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யுவதி அமர்ந்து பாடம் கற்கும் மேசை மீது அஜித் படங்கள் இருந்தால், ஏன் அவற்றை வைத்திருக்கின்றாய் என யுவதியை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவதி தனது உடலில் மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

திரையுலகின் மார்க்கண்டேயர் கவிஞர் வாலி

தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் கவிஞர் வாலி பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண் ணன் என்று வர்ணிக்கப்படுகின்றார். திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். இவரது குடும்பம் ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார்  பொன்னம்மாளின் தம்பதிகளுக்கு மகனாக 29 ஆம் திகதி ஒக்டோபர், 1931 ஆம்ஆண்டு பிறந்தார். டி.எஸ்.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட  வாலி படித்தது அந்தக்காலத்து எஸ்.எஸ்.எல்.சி. பின்னர், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் கல்வி கற்றார்.
தன் நண்பர்களின் துணையுடன்நேதாஜிஎன்னும் கையெழுத்துப் பத்திரிகையைத் ஆரம்பித்தார். அதன் முதல் பிரதியை எழுத்தாளர் கல்கியின் கையால் வெளியிட வைத்தார். அந்த விழாவிற்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி   வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகை மிகவும் பிரபலம் இடைந்தது.  பல இளைஞர்கள் அந்தப் பத்திரிகையில் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் பிரபல்யமானவை. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அத்துடன் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தமிழ் மொழியில் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. சிறப்பாக படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

கவிஞர் வாலி ரமணத்திலகம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோர்.  ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். மனைவியின் மறைவு வாலியை பெரும் துயரில் ஆழ்த்தி அவரை நோய்வாய்ப்பட வைத்தது. வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே தபால் அட்டையில் டி.எம்.எஸ் சௌந்தரராஜனுக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன் பாடல். இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!. 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்,வாலி  அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டியக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி போன்றன குறிப்பிடத் தக்கவை. இயக்குனர் மாருதிராவோடு  இணைந்து ‘வடை மாலை’ என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகிய  இருவருக்கும் கவிஞர் வாலி மிகவும் பிடித்தமானவர். எம்.ஜி.ஆர். வாலியை `என்ன ஆண்டவனே என்று தான் அழைப்பாராம். சிவாஜி கணேசன்`என்ன வாத்தியாரே’! என்றுதான் அழைப்பாராம்.
பல விருதுகளைப் பெற்ற வாலி, 2007 ஆம் ஆண்டு பத்மசிறி விருதினைப் பெபற்றுக் கொண்டார்.  அத்துடன் பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது, ஐந்து மாநில அரசின் விருதுகள் எனவும்  பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ்மாநாடு போன்றவற்றின் இவரது பங்கு அளப்பரியது. கண்ணதாசன் இறந்தபோது ‘எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’  என்ற கண்ணீர் வரிகளை வாலி எழுதினார். எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்தச் சந்தர்ப்பத்திலம் கவிஞர் வாலி வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. கடவுச்சீட்டே  இல்லாத பாட்டுக்காரர் இவர் என்று பலராலும் வியந்து புகழப்பட்டவர்.இலங்கைத் தமிழர்களின் மீது அதீத பற்றுக் கொண்ட கவிஞர் வாலி இறுதி யுத்தத்தின் போது  ‘இருக்கிறானா? இல்லையா? என்ற தலைப்பில் கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து  அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.
யார் மனதும் நோகும்படி ஒரு சொல்லைக் கூடப் பிரயோகிக்காத ஒரு கவிஞர். கவிமாமுனி, வாலிபக் கவி, காவியக் கவி என்றெல்லாம் இந்த திரையுலகம் ஆயிரம் அடைமொழி சூட்டி அழைத்தாலும், தனக்குப் பிடித்த ஒரே அடைமொழிகவிஞர்தான்  என்று அடிக்கடி கூறுவார் வாலி . முதல்வர் ஜெயலலிதாவை ரங்கநாயகி என்று புகழ்ந்தாலும், கலைஞரே என் உற்ற நண்பர் என எந்த மேடையிலும் தயங்காமல் சொல்லும் தைரியசாலி. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் வரிசையில் திரையிலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் செழுமைப்படுத்திய உழவன், இந்த தமிழ்க் கிழவன்!
 “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ” என்று உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் பாடல் எழுதிய வாலி, கடந்த மாதம் வெளியாகிய தில்லுமுல்லு திரைப்படத்தில் “கைபேசி எண் கூட சொல்லாமலே கைவீசி சென்றாளே நில்லாமலே” என்ற பாடலை எழுதினார். இந்த இரண்டு பாடலிலும் அவரின் இந்த இளைமைத் துடிப்பு சற்று குறைந்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே அவர் தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயக் கவிஞர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இதை உறுதிப்படுத்தும் விதமாக கவிஞர் வாலி அண்மையில் வெளியான எதிர் நீச்சல் திரைப்படத்தில் அவர்  எழுதிய “வெளிச்சப் பூவே” என்ற பாடல் இளசுகளின் தேசிய கீதமாக ஒலிக்கின்றது.தள்ளாத வயதிலும் காதல் ரசம் ததும்பும் சினிமாப் பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதைக் துள்ளாட்டம் போடவைத்த கவிஞர் வாலி இன்று மரணப்படுக்கையில் இருப்பது சினிமா ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் பேசும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நுரையீரலில் தொற்றும் சளி படலமும் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை  மோசம் அடைந்துள்ளது. தொடர்ந்தும் அவர் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger